
பாலஸ்தீனப் போராளிகள் பற்றி
நான் பேசலாம்
அயர்லாந்து சுதந்திர போராட்டம் பற்றி
நான் எழுதலாம்
தியான்மென் சதுக்க கொலைகளுக்கும்
நான் குரல் கொடுக்கலாம்
யாருக்கும் எந்த பிரச்சினை இல்லை
இராக் பற்றி
நான் கவலைப்படலாம்
திபெத்தியர்களுக்காக
நான் கண்ணீர் விடலாம்
பர்மியப் பெண்ணுக்கும்
நான் பரிந்து பேசலாம்
யாருக்கும் எந்த பிரச்சினை இல்லை
சேகுவராவை
நான் கொண்டாடலாம்
ஃபிடல் காஸ்ட்ரோவை
நான் வணங்கலாம்
கொசோவா விடுதலையை
நான் ஆதரிக்கலாம்
யாருக்கும் எந்த பிரச்சினை இல்லை
உலகின் எந்த மூலையில்
இனப்படுகொலை நடந்தாலும்
நான் மனிதாபிமானி ஆகலாம்
யாருக்கும் எந்த பிரச்சினை இல்லை
எங்கு உள்ளது எனத்தெரியாத
நாட்டைப் பற்றி
நான் பேசலாம்
நான் எழுதலாம்
நான் குரல் கொடுக்கலாம்
நான் வருத்தப்படலாம்
யாருக்கும் எந்த பிரச்சினை இல்லை
ஆனால்
என் கண்ணுக்கெட்டும் தூரத்தில்
கண்ணீர்த் துளியாய்
கடலுக்குள் கிடக்கும்
நாடு பற்றி மட்டும்
நான்
எதுவும் பேசக்கூடாது
எதுவும் எழுதக்கூடாது
எதுவும் சொல்லக்கூடாது
எதற்க்கும் குரல் எழுப்பக்கூடாது
ஏனென்றால்
நான் ஒரு தமிழன்
- பவுத்த அய்யனார்